

பேரையூர்:
சென்னையில் இருந்து கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் நெல்லைக்கு புறப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் வேன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் உள்ள ரெங்கம்மா ஊரணி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் மாடுகளை ஏற்றிக் கொண்டு சென்ற மற்றொரு சரக்கு வேன் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனை சற்றும் எதிர்பாராத கம்பி ஏற்றிய வேன், அந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாடுகள் ஏற்றிய வேன் ரோட்டோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் ஏற்றப்பட்டிருந்த 2 மாடுகள் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தன. அதிர்ஷ்டவசமாக டிரைவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் மற்றும் போலீஸ்காரர்கள் செந்தில்குமார், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
எதிர்ப்புற ரோட்டில் போலீஸ்காரர் செந்தில்குமார், முருகேசன் ஆகியோர் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இது குறித்தும் போலீசில் விசாரணை நடத்தி வருகின்றனர்.