காய்ச்சல் பாதிப்பு: வளசரவாக்கம்-பெருங்குடியில் 21-ந்தேதி சிறப்பு தனி வார்டுகள் திறப்பு - மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் வளசரவாக்கம், பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல வாழ்வு மையங்களில் சிறப்பு தனிக்காய்ச்சல் வார்டுகள் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கமி‌ஷனர் தெரிவித்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள நகர்ப்புற சமுதாய நல வாழ்வு மையங்களில் சிறப்பு தனிக்காய்ச்சல் வார்டுகள் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களும், 15 நகர சமுதாய நல வாழ்வு மையங்களும் மற்றும் 3 (24ஜ்7) மகப்பேறு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றது.

இம்மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், அனைத்து வகை காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளித்தல், கர்ப்பக்கால பரிசோதனை, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல், கர்ப்பக்கால முன் சிகிச்சை, பின் சிகிச்சை, தொற்றும் மற்றும் தொற்றா நோய்க்கான சிகிச்சை, எச்.ஐ.வி. ஆலோசனை, ஆய்வுக் கூட பரிசோதனைகள், அல்ட்ராசோனோகிராம் பரிசோதனை (ஸ்கேன்), காச நோய்க்கான பரிசோதனை, 30 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாயில் புற்று நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்தல் மற்றும் மேற்கண்ட சிகிச்சைகளோடு 15 நகர சமுதாய நல வாழ்வு மையங்களிலும், 3 (24ஜ்7) மகப்பேறு மருத்துவமனைகளில் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் மற்றும் தற்காலிக, நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைகள் போன்ற மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது.

மேலும் தற்பொழுது பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் செயல்படும் வளசரவாக்கம் மண்டலத்தில் மருத்துவமனை சாலை, ஜெய்கார்டன், சின்னப்போரூர், சென்னை.

பெருங்குடி மண்டலத்தில் ஸ்கூல் ரோடு, கந்தன் சாவடி, பெருங்குடி ஆகிய இரு மருத்துவ மண்டலங்களில் 100 படுக்கை வசதிகள் கொண்ட 24 மணி நேரமும் செயல்படும்.

நகர்ப்புற சமுதாய நலவாழ்வு மையங்களில் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள், டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கும் பொருட்டு, சிறப்பு தனிக் காய்ச்சல் வார்டுகள் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com