

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குஜராத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடி, காந்திக்கு வீரவணக்கம் செலுத்தினார். பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் பசுக்காவலர்கள் என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். மிருகவதை சட்டவிதிகளை நீங்கள் திருத்தியதால் தான் இந்த தாக்குதல்கள் நடக்கிறது. கால்நடைகளை காக்கிறோம் என்று மனித உயிர்கள் பறிக்கப்படுகிறது. மனிதர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த மிருகவதை சட்டதிருத்தத்தை ரத்து செய்தால், பசுக்காவலர்கள் என்கிற பெயரில் மனிதர்களை தாக்கும் அமைப்புகளை தடுத்து நிறுத்தமுடியும். பன்முகத்தன்மை தான் இந்திய ஜனநாயகத்தின் அஸ்திவாரம். இது தகர்ந்தால் இந்தியா என்கிற ஜனநாயகம் இருக்காது, இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இருக்காது.
சவால்கள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை பிரதமர் உணர்ந்து உடனடியாக சட்டவிதிகளை பொதுமக்கள் சார்பாக திரும்ப பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜி.எஸ்.டி.) பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த வரியால் ஓட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
5 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தம் செய்ய வேண்டும்.