வாஜ்பாய் உடல்நலம் குறித்து வைகோ நேரில் சென்று விசாரிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் உடல்நலம் குறித்து வைகோ நேரில் சென்று விசாரித்தார்.
வாஜ்பாய் உடல்நலம் குறித்து வைகோ நேரில் சென்று விசாரிப்பு
Published on

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று டெல்லி சென்றார். வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமீதாவிடம் வாஜ்பாய் உடல்நிலை பற்றி கவலையோடு விசாரித்தேன். அதற்கு அவர், ‘மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது; சிறுநீர் கழிக்கும் பாதையிலும் இடையூறு ஏற்பட்டது; எனவே, முன் எச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். கவலைப்பட தேவை இல்லை என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்’ என்றார்.

வாஜ்பாய்க்கு 2008-ம் ஆண்டு பக்கவாத தாக்குதல் வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு ஆண்டுக்கு மூன்று நான்கு முறை டெல்லிக்கு வந்து, அவரது இல்லம் சென்று படுக்கைக்கு அருகில் நின்று, அவரது நலம் வேண்டி இயற்கை அன்னையை பிரார்த்தனை செய்து, அவரது கால்களை தொட்டு வணங்கி விட்டு, வளர்ப்பு மகள் நமீதா, மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோரோடு அமர்ந்து பேசிவிட்டுத் திரும்புவது வழக்கம்.

முதல் இரண்டு ஆண்டுகள் நான் வந்து பார்த்தபோதெல்லாம் பேசிக்கொண்டுதான் இருந்தார். அதற்கு முன்பு, 1986-ம் ஆண்டு அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதே எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு தெரியாது. ஆனால், எனக்கு தகவல் கிடைத்ததால் அவரை பார்க்கத் தனியாக வந்து அவரோடு அமர்ந்து அரை மணி நேரம் பேசினேன். மனம் நெகிழ்ந்து போனார். பின்னாளில் அதை பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

வாஜ்பாயை, அவருடைய உயிர் நண்பரான ஷிவ்குமாருடன், 1979-ல் மோதி மகால் ஓட்டலில் சந்தித்தேன். வாஜ்பாய்க்கு மெய்க்காப்பாளராகவும் இருந்து வருகின்ற ஷிவ்குமாரையும் சந்தித்தேன். அவர் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். ‘தலைவர் வாஜ்பாய் மீது உயிரான அன்பு கொண்டவர் நீங்கள்; அதைப்போல அவரும் உங்களை நேசிக்கின்றவர்’ என்று உணர்ச்சி வயப்பட்டு சொன்னார்.

வாஜ்பாய் முழுமையான நலம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை, நமீதாவிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com