

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள பிலாத்து கலைஞர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). இவர் நேற்று தனது அக்காள் போதும்பொண்ணு (22), மற்றொரு அக்காள் மகன்
ஹர்ஜித் (3) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். வடமதுரை தென்னம்பட்டி பிரிவில் திண்டுக்கல்-திருச்சி தேசிய
நெடுஞ்சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியே தஞ்சாவூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில்
மோட்டார் சைக்கிளில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கழிவுநீர் கால்வாயில் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் மணிகண்டன், போதும்பொண்ணு, குழந்தை ஹர்ஜித், காரில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த உமர் சலீம் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.