ஊத்துக்கோட்டையில் ஜாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு நடனமாடி நன்றி தெரிவித்த இருளர்கள்

ஊத்துக்கோட்டை அருகே பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அதிகாரிகள் ஜாதி சான்று வழங்கினர். இதையொட்டி பழங்குடி மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஊத்துக்கோட்டையில் ஜாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு நடனமாடி நன்றி தெரிவித்த இருளர்கள்
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர், ஜே.ஜே.நகர், கட்சூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இருளர் இன மக்கள் சுமார் 40 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் இல்லாததால் இவர்கள் அரசின் சலுகைகள் பெற முடியாமல் இருந்தது.

இதையடுத்து சான்றிதழ்கள் பெற்றுதர இருளர்கள் மக்கள் கட்சி நிறுவனர் பிரபு முயற்சிகள் மேற்கொண்டார். அதன்பேரில் ஜாதி சான்றுகள் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இருளர்களுக்கு ஜாதி சான்றுகள் வழங்கும் விழா பேரண்டூரில் நேற்று நடைபெற்றது. இரா. பிரபு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், டிஆர்ஓ முத்து, ஆர்டிஓ திவ்யாஸ்ரீ, ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா ஆகியோர் பழங்குடி இன மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று 345 பேருக்கு ஜாதி சான்றுகள் வழங்கினர்.

சுமார் 40 வருடங்களுக்கு பின் ஜாதி சான்றுகள் கிடைக்க பெற்றதால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சியில் பாரம்பரிய டப்பு நடனம் ஆடி நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் துணை தாசில்தார் கதிர், வருவாய் ஆய்வாளர்கள் ரவி, ராஜேஷ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரஜினி கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com