முதியவர்கள் மர்மச்சாவு புகார்: உத்திரமேரூர் கருணை இல்ல நிர்வாகிக்கு நோட்டீஸ்

முதியவர்கள் மர்மச்சாவு புகாரையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவி கருணை இல்ல நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதியவர்கள் மர்மச்சாவு புகார்: உத்திரமேரூர் கருணை இல்ல நிர்வாகிக்கு நோட்டீஸ்
Published on

சென்னை:

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய் கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் இந்த கருணை இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ் (72), அன்னம்மாள் (74) ஆகியோரையும் அதே வேனில் பிணத்துடன் அழைத்து சென்றது.

பொது மக்கள் கண்டு பிடித்து வேனை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை தனியாக பிரித்து வெளிநாட்டில் விற்பதாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அதிகாரிகள் கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பது தெரியவந்தது.

ஒவ்வொரு மாதமும் சுமார் 40 முதல் 50 முதியோர் மர்மமான முறையில் இறப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று காலை மத்திய உளவுத்துறையினர் கருணை இல்லத்திற்கு வந்து விசாரித்ததாக கூறப்படுகின்றது.

கருணை இல்ல வாயிலில் கிராம மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் திரண்டதை அடுத்து மத்திய உளவுத்துறையினர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த முதியோர் கருணை இல்லத்தில் எலும்புகள் கடத்தல் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் இதுவரை அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 1200-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் அங்குள்ள நவீன கல்லறையில் புதைக்கப்பட்டனர். இவர்களின் மரணம் மற்றும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் தற்போதைய நிலை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறுகையில் இந்த கருணை இல்லத்தில் தற்போது 300-க்கும் மேற்பட்டோர் மிகவும் வயது முதிர்ந்து உயிர் பிரியும் தருவாயில் உள்ளனர். இவர்களுக்கு தற்போதும் உணவும் சிகிச்சையும் அளித்து வருகின்றோம். இறந்தவர்களை ஐரோப்பிய முறையில் புதைத்து வருகின்றோம்.

இது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. இது வரை ஏறத்தாழ 1500-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இது போன்று அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இல்லத்தினை குறித்து கிராம மக்கள் எழுப்பும் எந்தவித கேள்விக்கும் உரிய பதிலளிக்கின்றோம்.

அரசு அதிகாரிகள் இல்லத்தில் எந்த ஆய்வினையும் மேற்கொள்ளலாம். இந்த இல்லத்தில் தங்கியுள்ளவர்களின் உறவினர் அழைத்துச் செல்ல விரும்பினால் உரிய ஆவணங்களைக் காட்டி உடனே அழைத்துச் செல்லலாம். மேலும் கருணை இல்லம் நடத்த பெறப்படும் நிதி உதவிகள் குறித்து உரிய ஆவணங்கள் உள்ளன.

முறையாக வருமான வரியினையும் செலுத்தி வருகின்றோம். இந்த இல்லத்தினை அரசே ஏற்று நடத்தினாலும் நாங்கள் அளிக்கத் தயார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவி பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளதா என்பது குறித்து 7 நாட்களுக்குள் நிர்வாகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com