

வாஷிங்டன்:
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேஸ்பால் மைதானத்தில் மர்ம்நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில் விர்ஜினியா மாநிலத்தில் டிரம்பின் குடியரசு கட்சி கொறடா ஸ்டீவ் மற்றும் அவரது உதவியாளர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விர்ஜினியா போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
துப்பாகிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவது அமெரிக்கா வாழ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.