

வாஷிங்டன்:
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இதில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார். கடந்த 18 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய புரட்சி என தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார். இதனிடையே, மதுரோ அரசுக்கு எதிராக பெரிய போராட்டமும் வன்முறையும் நடைபெற்றது.
இதனையடுத்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்தது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. வடகொரிய அதிபர் கிம் ஜான்-உன், சிரிய அதிபர் ஆசாத் ஆகியோருக்கு பிறகு மதுரோ மீது அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் அதிபர் சாவேஸின் சகோதரர் உட்பட வெனிசுலா நாட்டின் 8 அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதிபர் மதுரோவிற்கு உதவி புரிந்ததாக கூறி இந்த தடை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
தனிப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நாடுகள் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தடை நடவடிக்கை தொடர் கதையாகி வருகின்றது.