அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை - காரணம் இதுதான்

60 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
மரண தண்டனை
மரண தண்டனை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரியாவார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்றார். எலியை வேட்டையாடும் பூனையை தத்தெடுப்பதற்காக சென்ற லிசா 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த ஸ்டின்னெட்டின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் கத்தியால், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு லிசாவுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது குழந்தை இல்லாத லிசா வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து, தன்னுடையதாகக் காட்டிக் கொள்ள முயன்றதாக கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இதை அவர் சுயநினைவில்லாத நிலையில்தான் செய்ததாக அவரது வக்கீல் வாதிட்டார். அதை கோர்ட்டு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் குற்றவாளி என்று அறிவித்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.

வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி இண்டியானாவில் உள்ள சிறை வளாகத்தில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் லிசா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com