அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு இன்று தொடங்கியது -6 லட்சம் பேர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது.
ஐதராபாத் மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள்
ஐதராபாத் மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள்
Published on

புதுடெல்லி:

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணிகளுக்கான போட்டித் தேர்வை (சிவில் சர்வீசஸ் தேர்வு) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. அவ்வகையில், நாடு முழுவதும் கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்வை மேலும் தள்ளி வைக்கக்கோரி, தேர்வர்கள் 20 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். யுபிஎஸ்சி அளித்த விளக்கத்தை ஏற்று இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று தேர்வு நடைபெறுகிறது. இன்று இரண்டு கட்டமாக தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு முதல் தாள் தேர்வு தொடங்கியது. பிற்பகல் 2.30 மணிக்கு 2ம் தாள் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள 62 மையங்களில் சுமார் 22000 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.

தேர்வில் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு அறைக்கு வரவேண்டும், அனைவரும் மாஸ்க் அணியவேண்டும், தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர்களை தேர்வர்களே கொண்டு வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com