

லக்னோ:
நமது நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே மாட்டு சிறுநீர் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலவகை ஆயுர்வேத மருந்துகளை நாட்டு வைத்தியர்கள் மாட்டு சிறுநீர் மூலம் தயாரித்து வருகிறார்கள்.
இதேபோல வீட்டு தரையை சுத்தப்படுத்துவதற்கு மாட்டு சிறுநீரால் தயாரிக்கப்பட்ட திரவத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு மாட்டு சிறுநீரில் இருந்து 8 வகையான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மாநில ஆயுர்வேத துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆயுர்வேத துறையின் இயக்குனர் ஆர்.ஆர். சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது நாட்டில் ஏற்கனவே ஆயுர்வேத மருத்துவ முறையில் மாட்டு சிறுநீர் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டோம். உத்தரபிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பல்வேறு வகை மருந்துகளை தயாரிக்கலாம் என கண்டுபிடித்துள்ளோம். அதன்படி ஈரல் நோய்களை தடுக்கும் மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து, மூட்டு வலியை குறைக்கும் மருந்து உள்ளிட்டவை தயாரிக்க முடியும்.
எனவே இந்த வகையில் 8 மருந்துகளை தயாரிக்க இருக்கிறோம். மேலும், மாட்டு சிறுநீர் தொடர்பான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த உள்ளோம். இதன்மூலம் மேலும் பல மருந்துகள் தயாரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
உத்தரபிரதேச ஆயுர்வேத துறைமூலம் லக்னோ, பிலிபட் ஆகிய இடங்களில் மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. மேலும் தனியார் நிறுவனம் ஒன்றும், அரசுடன் இணைந்து மருந்து தயாரித்து வருகிறது. அவற்றின் மூலம் இந்த மருந்துகள் தயாரிக்கப்படும்.
மேலும் மாட்டு பால், நெய் ஆகியவற்றில் இருந்தும் பல மருந்துகளை தயாரிப்பதற்கு முயற்சித்து வருகிறோம். எங்கள் மாநிலத்தில் 8 ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் இந்த வகை மருந்து தயாரிப்பு பற்றிய பாடங்களும் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு தினமும் அதிக நோயாளிகள் வருகின்றனர். லக்னோ ஆஸ்பத்திரிக்கு மட்டுமே 700-லிருந்து 800 பேர் வரை வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews