அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு

அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
Published on

சென்னை:

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற செமஸ்டர் தேர்வுகளை எல்லாம் தமிழக அரசு ரத்து செய்து விட்டது.

செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோல, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அரியர் தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, ‘இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடைய செய்ய முடியாது என்றும், அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது என்று கூறியிருந்தது. இதையடுத்து, ‘இறுதி பருவ தேர்வுகளை ஆன்-லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது?’ என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. அந்த வழக்கு வருகிற 20-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மீண்டும் ஒரு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு நடத்தாமல் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்ப பெற்று புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அரியர் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com