

புதுடெல்லி:
தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் வயதானவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.200 உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதுபோல விதவைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.300 ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் அமலில் உள்ளது.
முதியோர் மற்றும் விதவைப் பெண்களுக்கான மாத ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு நடத்தி வந்தது.
இதையடுத்து முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் இதை உறுதிபடுத்தினார்.
முதியோர், விதவைப் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே இந்த ஆண்டு உதவித்தொகை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
வரும் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews