ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் - ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

இனப்படுகொலைக்கு உள்ளான ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டுமென ஐ.நா. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஹிங்கியா (கோப்பு படம்)
ரோஹிங்கியா (கோப்பு படம்)
Published on

தி ஹேக்:

மியான்மரின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். 

வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து புத்த மத மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த மியான்மர் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்ட்டனர்.

இந்த கிளர்ச்சி குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பல ஆண்டுகளாக மிக கடுமையான மோதல் நடைபெற்றுவந்தது. 

இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒடுக்கும் வகையில் ரக்கினே பகுதியை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல்கள் நடத்தினர். 

ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இன மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டன. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

மியான்மர் ரானுவத்தின் இனப்படுகொலைக்கு அஞ்சி சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மேற்பட்ட அந்த ரோஹிங்கியா மக்கள், அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். 

தற்போது மியான்மரில் உள்ள ரோஹிங்கியா மக்கள் மிகுந்த பயத்துடனேயே வாழ்ந்துவருகின்றனர். 

இதற்கிடையில், இந்த இனப்படுகொலை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மியான்மர் அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com