

லண்டன்:
பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. தெரசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், கடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை வென்ற கன்சர்வேடிவ் கட்சியால், இம்முறை பெரும்பான்மை பெற முடியாமல் போனது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவுக்கு பிரதமர் தெரசா மே எடுத்த சில நடவடிக்கைகள்தான் காரணம் என அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், கட்சித்தலைமையையும், பிரதமர் பதவியையும் தெரசா மே, மற்றொரு முக்கிய தலைவரான போரீஸ் ஜான்சனிடம், ஒப்படைக்க வேண்டும் என ஐந்து மந்திரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரெக்ஸிட் நடவடிக்கைகை முன்னெடுத்துச் செல்ல ஜான்சன் சரியான நபர் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரசா மேயின் நெருங்கிய ஆலோசகர்களான திமோதி மற்றும் ஹில் ஆகியோர் நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.