யுகாதி திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு- பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டத்தில் யுகாதி திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
யுகாதி திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு- பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

தர்மபுரி:

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருவிழா நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தர்மபுரி நகரில் யுகாதி பண்டிகையையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தர்மபுரி நெசவாளர் நகர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், ஆராதனையும் நடைபெற்றது.

காரிமங்கலம் மந்தை வீதியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் யுகாதி தேர்த்திருவிழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மகா சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com