உடுமலை சங்கர் கொலை- மேல்முறையீட்டு வழக்கில் பதில் தர கவுசல்யா தந்தைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உடுமலை சங்கர், கவுசல்யா
உடுமலை சங்கர், கவுசல்யா
Published on

புதுடெல்லி:

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிரிழந்தாா். 

மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. மேலும் மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மற்றும் மதன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன், கவுசல்யா தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மேல்முறையீட்டு மனுக்களுக்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com