

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தூரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் குப்வாரா மாவட்டத்தின் ஹல்மத்போரா கிராமத்தில் நேற்று நடந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews