தெலுங்கானாவில் போராட்டம் தீவிரம்- 2 பஸ் ஊழியர்கள் மாரடைப்பில் மரணம்

தெலுங்கானாவில் மாநில போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேலும் 2 பஸ் ஊழியர்கள் மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளனர்.
மரணம்
மரணம்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானாவில் மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பணி நீக்கம் செய்ப்பட்டதால் 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிலர் உயிர்ழந்தனர்.

இந்த நிலையில் மேலும் 2 பஸ் ஊழியர்கள் மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளனர்.

ரெங்காரெட்டி மாவட்டம் மால் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் கவுடு. முஸ்ஹிராபாத் பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ரமேஷ் கவுடுக்கு தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் கவுடு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

நிஜாமாபாத் பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்த முகமத் கப்போர் தனது வீட்டில் வேலை நிறுத்தம் தொடர்பான செய்திகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுவரை போராட்டங்களில் ஈடுபட்ட 6 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று 20-வது நாளாக நீடிக்கிறது. இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டிரி சமிதி கட்சி தலைவர்கள் வீடுகள் முன்பு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரீம்நகரில் உள்ள அமைச்சர்கள் ராஜேந்தர், கங்குல கமலாகர் ஆகியோர் வீடுகளுக்கு சென்ற ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com