ரஷியாவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்

ரஷியா நாட்டின் வடக்கு கவுகாசஸ் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருவரை தேடுதல் வேட்டையின்போது சிறப்புப்படை போலீசார் சுட்டுக் கொன்றனர். #TwoIslamicstatemilitants #Russiacounterterrorism
ரஷியாவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்
Published on

மாஸ்கோ:

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரை உலகின் சில நாடுகளில் உள்ள அனுதாபிகள் ரகசியமாக ஆதரிப்பதுடன் அவ்வியக்கத்தின் கைக்கூலிகளாக மாறி உள்நாட்டில் வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அவ்வகையில், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் சில ஐ.எஸ். பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்தொடர்ச்சியாக, ரஷியாவின் கஸ்வியூர்ட் பகுதிக்கு உட்பட்ட மசூதி மீது கடந்த ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருக்கும் கிராமங்களை சேர்ந்த ஒரு இமாம் மற்றும் இன்னொருவரை படிகொலை செய்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இரு போலீஸ் அதிகாரிகளையும் இவர்கள் கொன்றனர். 

இந்த படுகொலைகளுக்கு காரணமான இரு பயங்கரவாதிகள் ரஷியாவின் வடக்கு கவுகாசஸ் பகுதிக்கு உட்பட்ட என்டிரேய் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத சிறப்பு படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, அந்த கிராமத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்குரிய வீட்டை முற்றுகையிட்டனர். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அருகாமையில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

போலீசார் சுற்றிவளைத்து விட்டதை தெரிந்துகொண்ட பயங்கரவாதிகள் உள்ளே இருந்தபடி அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் மூன்றுபேர் காயமடைந்தனர்.

போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த வீட்டினுள் பதுங்கி இருந்த இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதன்மூலம் அப்பகுதியில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட்டதாகவும் ரஷிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #TwoIslamicstatemilitants #Russiacounterterrorism

X

Maalai Malar
www.maalaimalar.com