

சென்னை வேளச்சேரியில் இருந்து இன்று காலை 8.20 மணிக்கு பட்டாபிராம் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் மந்தைவெளியை கடந்து மயிலாப்பூர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது அதே தடத்தில் மற்றொரு ரெயில் நின்றுள்ளது. இதனால் உஷாரான டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். குறைந்த வேகத்தில் சென்றதால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
எதிர் முனையில் இருந்து ரெயில் வருவதாக முதலில் பயணிகள் நினைத்து பீதி அடைந்தனர். ஆனால், அந்த ரெயில் வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு கடற்கரை நோக்கி வந்த வழியில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே பின்னால் வந்த மற்ற ரெயில்களுக்கும் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டன.