தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

தாரமங்கலம் அருகே மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான நவீன்குமார், சஞ்சய்
பலியான நவீன்குமார், சஞ்சய்
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது மகன் நவீன்குமார் (வயது 16). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான். அதே பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகன் சஞ்சய் (11). இவன் பெரியகாடம்பட்டியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நவீன்குமாரும், சஞ்சய்யும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் பெரியாம்பட்டி ஏரியில் நிறைய மீன்கள் இருப்பதாக அறிந்தனர். இதைத்தொடர்ந்து நவீன்குமார், சஞ்சய் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் சேர்ந்து ஏரிக்கு நேற்று காலை 9 மணிக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது வேட்டியை விரித்துக்கொண்டு ஏரியில் இறங்கி அவர்கள் மீன் பிடித்தனர்.

இதில் நிறைய மீன்கள் கிடைத்ததால், இன்னும் அதிகமான மீன்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாததால் நவீன்குமார், சஞ்சய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 3 பேரும் ஊருக்குள் சென்று தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் ஏரிக்கு விரைந்து வந்தனர். அங்கு சஞ்சய், நவீன்குமார் ஆகியோரை பிணமாக மீட்டனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com