சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்... புதின், எர்டோகன் பேச்சுவார்த்தையில் முடிவு
மாஸ்கோ:
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.
கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் சண்டையில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிரிய போர் விமானத்தை துருக்கி படைகள் சுட்டுவீழ்த்துவதும் அதற்கு பதில் தாக்குதலும் என சண்டை நீண்டுகொண்டே போனதால் போர் பதட்டம் மேலும் அதிகரித்தது.
இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், இட்லிப் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இட்லிப் மாகாணத்தில் நடைபெற்றுவரும் சண்டையை நிறுத்த இரு நாடுகளுக்கு இடையேயும் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி இன்று நள்ளிரவு முதல் சண்டை நிறுத்தம் செயல்பாட்டிற்கு வருகிறது.
ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துருக்கி அதிபர் எர்டோகன், 'நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவே இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஆனால் துருக்கி மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் நாங்கள் முழு பலத்துடன் திருப்பித்தாக்குவோம்’ என்றார்.

