சிரியா மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்கா எச்சரிக்கை

சிரியா அரசு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #Syria #chemicalweapons #JohnBolton
சிரியா மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்கா எச்சரிக்கை
Published on

அரபு நாடான சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்தை தூக்கி எறிய அமெரிக்க ஆதரவு புரட்சி படைகள் ஒரு பக்கம் போரிட்டு வருகின்றன. இவை தவிர குர்திஸ் படைகள், துருக்கி ஆதரவு புரட்சி படை ஆகியவையும் போரிடுகின்றன.

ஏற்கனவே புரட்சி படையினரிடம் இருந்த கிழக்கு அலப்போ, கிழக்கு கூடா, தாரா ஆகிய பகுதிகளை ரஷிய படைகள் உதவியுடன் சிரியா மீட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சண்டைக்கு இடையே குண்டுவீச்சில் சிக்கி பலியானார்கள்.

சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன.

ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தாக்குதல் நடக்கும் பட்சத்தில் இந்நகரில் தற்போது வசிக்கும் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிப்பை சந்திப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இத்லிப் நகரில் பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியா அரசு ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளதாவது :

சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், இத்லிப் நகரில் ரசாயன தாக்குதல் நடத்த சிரியா திட்டமிட்டுள்ளது. அவ்வாறு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டுப்படைகள் இணைந்து கடுமையான பதில் தாக்குதல் தொடுக்கும். இதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் ஒப்புதல் வழங்கிவிட்டன.

எனவே, பொதுமக்களின் பாதுக்காப்பை பற்றி கவலைப்படாமல் மீண்டும் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்தால், ஏற்கனவே கிழக்கு கவுட்டா நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை விட மோசமான தாக்குதலை சிரியா சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் சிரியா விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்களில் நடத்திய ரசாயன தாக்குதலில் குழந்தைகள் உள்பட 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com