திருச்சி அருகே லாரி மோதி சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலி

திருச்சி அருகே லாரி மோதி சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து
விபத்து
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி கொணலை அருகே நான்கு வழிச்சாலையோரம் இன்று காலை முட்புதர்களை அகற்றும் பணியில் சாலை பணியாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த கனரக லாரி திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் வேலை செய்து கொண்டிருந்த சாலைப்பணியாளர்கள் மீது மோதி விட்டு சற்று தூரம் சென்று விட்டது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் மதுரை வீரன் காலனியை சேர்ந்த காந்தி (வயது 22) மற்றும் தனசேகர், விஜயகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை மற்ற தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்து நிகழ்ந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்தில் பலியான காந்தி, விஜயகுமார், தனசேகர் ஆகியோர் திருச்சி கொணலையில் தங்கியிருந்து சாலைப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் லாரி மோதி 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com