ஆம்பூரில் லாரி - பஸ் மோதல்: 45 பேர் படுகாயம்

ஆம்பூரில் லாரி மீது அரசு பஸ் மோதியதில் 45 பேர் படுகாயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களை உதவி கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
விபத்துக்குள்ளான பஸ்
விபத்துக்குள்ளான பஸ்
Published on

ஆம்பூர்:

சென்னையில் இருந்து தருமபுரிக்கு அரசு பஸ் 43 பயணிகளுடன் இன்று அதிகாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை, வாணியம்பாடி ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 50) என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார். பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணியளவில் ஆம்பூர் புது கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் ஒடிசாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற சரக்கு லாரி மீது பஸ் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. பஸ் டிரைவர் செந்தில், கண்டக்டர் ராஜேந்திரன் மற்றும் 43 பயணிகள் உள்பட மொத்தம் 45 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேல் சிகிச்சைக்காக, பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் சுதாகரன் (20), அறிவழகன் (30), பாக்கிய நாதன் (50), சிவசங்கர் (51), மோகன்குமார் (35) ஆகிய 7 பேரும் வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தையறிந்த திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயன், ஆம்பூர் தாசில்தார் மீரா பென் காந்தி மற்றும் வருவாய் துறையினர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் உதவி கலெக்டர் கார்த்திகேயன் செய்து கொடுத்தார்.

இச்சம்பவம் குறித்து, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com