சோமாலியாவில் டிரக் வெடிகுண்டு தாக்குதல்- 61 பேர் பலி

சோமாலியாவில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய டிரக் வெடிகுண்டு தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர்.
வெடிகுண்டு வெடித்ததில் சிதைந்த வாகனம்
வெடிகுண்டு வெடித்ததில் சிதைந்த வாகனம்
Published on

மொகடிஷூ:

சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து இந்த  தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில், அப்பாவி மக்கள் பலர் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில், மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். வரி செலுத்துவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றபோது, அந்த பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட டிரக்கை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு, உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடித்தனர்.

இந்த கோர தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும், அல்ஷபாப் அமைப்பு இந்த  தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com