திருச்சி அருகே செல்போன் கடையில் துணிகர கொள்ளை

திருச்சி அருகே நள்ளிரவு ஏணியுடன் வந்து செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே செல்போன் கடையில் துணிகர கொள்ளை
Published on

நெ.1.டோல்கேட்:

திருச்சியை அடுத்த  சமயபுரத்தை சேர்ந்தவர் ரெங்கபிரபு (வயது 35). அதே பகுதியைச்சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர்கள் இருவரும் சேர்ந்து நெ.1.டோல்கேட் அருகே உள்ள நொச்சியம் டோல்கேட் சாலையில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடையில் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.

நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டி சென்றனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அங்கு வந்த `மர்ம' நபர்கள் கடையின் பின்பக்கம் வழியாக சென்று ஏணியை வைத்து கடையின் கூரை மேல் ஏறினர். பின்னர் ஓட்டு கூரையை பிரித்து கடையின் உள்ளே நுழைந்தனர். 

கடையில்  இருந்த 20 புதிய செல்போன்கள் மற்றும் சர்வீஸ் செய்ய வந்த 25 செல்போன்கள் மற்றும் அங்கு இருந்த செல்போன் சார்ஜர்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை 2 மூட்டைகளாக கட்டினர். பின்னர் 2 மூட்டைகளுடன் வந்த வழியாக திரும்பி மேலே  ஏறினர். கடையின் முன்பக்கம் வந்து மூட்டைகளை போட்டு விட்டு கீழே குதித்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்ற தொழிலாளர்கள் இதை பார்த்தனர். 

உடனே அவர்கள் திருடன் திருடன் என சத்தம் போட்டபடி அவர்களை விரட்டி சென்றனர். உடனே 2 மர்ம நபர்களும் 2  மூட்டைகளில் ஒன்றை மட்டும் கீழே போட்டு விட்டு தப்பி யோடினர். மாட்டு வண்டி தொழிலாளர்களும் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்துசென்று கடையை கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டனர். மர்ம நபர்கள் விட்டு சென்ற மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில் செல்போன் சார்ஜர், உதிரி பாகங்கள் மட்டும் இருந்தது. கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை சேகரித்தனர்.

கடையின் முன்பு சந்தேகத்திற்கு உரிய வகையில் 2 மோட்டார் சைக்கிள் நின்றது. அது கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிளா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சமாகும். நெ.1.டோல்கேட்டில் நள்ளிரவு ஏணியுடன் வந்து செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போலீசார் ரோந்து நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com