கீரமங்கலம் அருகே சிகிச்சைக்கு வந்த விவசாயிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியர்

ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவமனை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியரை படத்தில் காணலாம்.
விவசாயிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியரை படத்தில் காணலாம்.
Published on

கீரமங்கலம்:

கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன் (வயது 38). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் கீரமங்கலம் வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு வாகனம் வருவதை பார்த்து திடீரென பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி சாலையிலேயே விழுந்தார். அப்போது ஹெல்மெட் உடைந்ததில், அவருக்கு கீழ் தாடை மற்றும் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், காக்கி சீருடை அணிந்திருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கார்த்தீபனுக்கு தையல் போட்டுள்ளார். அவர், கார்த்தீபனுக்கு தையல் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது, ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று தையல் போடப்படுவதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் செல்வோர் உயிர் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தலைக்கவசம் உயிர் கவசம் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருவதுடன், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் கார்த்தீபன் ஹெல்மெட் அணிந்திருந்தும், அது தரமில்லாததாக இருந்ததால் ஹெல்மெட் உடைந்து அவர் படுகாயம் அடைந்தார். எனவே தரமில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனையை தடுக்க போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com