

நியூயார்க்:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம் உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகக்குழுவில் புதிதாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக உபேர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ டிராவிஸ் கலாநிக் தெரிவித்துள்ளார். ஜெராக்ஸ் நிறுவனத்தில் சி.இ.ஓ. மற்றும் தலைவராக இருந்த உர்சுலா பர்ன்ஸ் மற்றும் சிஐடி மற்றும் நியூயார்க் பங்குச்சந்தையின் தலைமைப்பொறுப்பில் இருந்த ஜான் தாய்ன் ஆகிய இருவரும் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக டிராவிஸ் கலாநிக்கின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உபேர் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இது ஒரு ஆச்சரியமிக்க செய்தியாக இருக்கும். புதிதாக நியமிக்கப்பட்ட இருவரது அனுபவங்களும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என டிராவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகிய கலாநிக், தனக்குப்பதிலாக தாரா ஹோஸ்ரோவ்ஷாஹி என்பவரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.