

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள ஏ.வி.பட்டி சாலை செல்லும் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இங்கு இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தார். கைலியும் சட்டையும் மட்டுமே அணிந்திருந்தார். எந்த ஊர்? என்ன பெயர்? என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசர் இறந்தவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை, அய்யலூர், எரியோடு, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் ரெயில்வே தண்டவாளங்களில் மர்மமான முறையில் உடல்கள் கிடப்பது தொடர்கதையாகி வருகிறது. பலரது உண்மை நிலை இன்னும் தெரியாமல் உள்ளது. அதன் வரிசையில் தற்போது மீண்டும் ஒரு ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews