தாம்பரம் ரெயில் நிலையத்தில் என்ஜின் மோதியதால் ரெயில் தடம் புரண்டது

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை என்ஜின் மோதியதால் ரெயில் தடம் புரண்டது. 11-வது பிளாட்பாரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் என்ஜின் மோதியதால் ரெயில் தடம் புரண்டது
Published on

தாம்பரம்:

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் பராமரிப்பு பணிக்காக தாம்பரம் பகுதியில் உள்ள மூன்றாவது முனையத்திற்கு ரெயிலை கொண்டு சென்றனர். அந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி இருந்தனர்.

எக்ஸ்பிரஸ் ரெயிலை பின்புறமாக இழுப்பதற்காக டீசல் என்ஜினை ஊழியர் ஒருவர் ஓட்டி வந்தார். டீசல் என்ஜின் வழக்கத்தைவிட சிறிது வேகமாக வந்ததாக தெரிகிறது.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அருகே நிறுத்த முடியாமல் ரெயிலின் கடைசி பெட்டி மீது என்ஜின் பயங்கரமாக மோதியது. இதில் ரெயில் பெட்டி சேதமடைந்தது. மேலும் அந்த பெட்டியின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அபாய சங்கு ஒலியை எழுப்பினர். இதனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்டனர்.

பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பராமரிப்புக்காக முனையத்துக்கு கொண்டு சென்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தை ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.

11-வது பிளாட்பாரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com