ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

தொடர் விடுமுறையிலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்ததை காணலாம்
ஊட்டி தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்ததை காணலாம்
Published on

ஊட்டி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடியே காணப்படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா மற்றும் கர்நாடக மாநில பூங்கா மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று நீலகிரிக்குள் வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது இதன் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக தொடர் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். இதன் மூலம் தங்கும் விடுதிகள், உணவகங்கள், காட்டேஜ்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் வியாபாரம் களை கட்டும்.

தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ- பாஸ் விண்ணப்பித்த உடன் கிடைக்கிறது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீலகிரிக்கு வர சுற்றுலா பயணிகள் போதிய ஆர்வம் காட்டுவது இல்லை. இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காலங்களில் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, கர்நாடக மாநில பூங்காவில் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகளே வந்து சென்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து தாவரவியல் பூங்கா அலுவலர்கள் கூறியதாவது:-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொலை தூரங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில்லை. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமே முறையான அனுமதி பெற்ற சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 1,600 பேர் மட்டுமே வந்து உள்ளனர்.

கடந்த காலங்களில் தொடர் விடுமுறையின்போது ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com