சுங்கசாவடியை சேதப்படுத்திய வழக்கு- வேல்முருகனுக்கு வருகிற 22-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனுக்கு வருகிற 22-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கோர்ட்டில் வேல்முருகனை ஆஜர்படுத்த அழைத்து வந்த போது எடுத்தப்படம்
விழுப்புரம் கோர்ட்டில் வேல்முருகனை ஆஜர்படுத்த அழைத்து வந்த போது எடுத்தப்படம்
Published on

விழுப்புரம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கடந்த 26-ந் தேதி கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி வேல்முருகன் சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வேல்முருகனின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து விழுப்புரத்துக்கு தனி வேனில்பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

இன்று மதியம் 12 மணிக்கு வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிபதி லதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேல்முருகனை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடைய வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்து வரும் தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கோர்ட் முன்பு திரண்டனர். வேல்முருகனை விடுதலை செய்ய கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  #velmurugan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com