

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்த படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டது.
தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவித்தார்.