டெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை

டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Student #commitsuicide
ஸ்ரீமதி
ஸ்ரீமதி
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார்.

இவரது ஒரே மகள் ஸ்ரீமதி. கலெக்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட மகளை அவரது தந்தை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார். ஸ்ரீமதி டெல்லியில் தங்கி ஐ.ஏ.எஸ் படித்து வந்தார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீமதி தங்கி உள்ள விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோருக்கு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று காலை கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் உயிரிழந்த ஸ்ரீமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளானவர்போல் காணப்பட்டதாக டெல்லி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com