தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகள் பாராட்டினர் -பழனிசாமி பேச்சு

தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகள் பாராட்டினர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு விருது வழங்கும் முதலமைச்சர்
போலீசாருக்கு விருது வழங்கும் முதலமைச்சர்
Published on

சென்னை:

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 596 போலீசாருக்கு ஜனாதிபதி மற்றும் முதல்வர் விருதுகளை  முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார்.

அத்திவரதர் உற்சவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக டிஜிபி திரிபாதிக்கு சிறப்பு பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

மேலும், காவல், லஞ்சம், தீயணைப்பு, சிறை, ஊர்க்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு, தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும்  தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 48 நாட்களாக அத்திவரதர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவின் தொடக்கத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜனாதிபதி, முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- 

தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகளே பாராட்டினர்.  மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் சந்திப்புக்கு காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பை  வழங்கினர்.

நாட்டிலேயே பிற மாநில காவல்துறைக்கு தமிழக காவல்துறை முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது.  சென்னை முழுவதும் 1.37 லட்சம் சிசிடிவி கேமராக்கள் வைத்துள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளன.

காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. அமைதி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.  நாட்டிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை தான் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com