தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் இணையசேவை வழங்கப்படும் - டிஜிபி ராஜேந்திரன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்துள்ளவர்கள் தூத்துக்குடி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் பார்வையிட்டார். #SterliteProtest
தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் இணையசேவை வழங்கப்படும் - டிஜிபி ராஜேந்திரன்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்க கூடியது. அமைதியை நிலைநாட்ட மக்கள், வணிகர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். நிலைமை சீராக சீராக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இதனை அடுத்து, நான்கு மண்டல டிஐஜி, மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். போலீசாரை படிப்படியாக குறைப்பது, நள்ளிரவு முதல் இணையசேவையை மீண்டும் வழங்குவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com