வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முதல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
மானிய விலையில் ஸ்கூட்டி பெற விரும்பும் பெண்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்தவகையில், ஓட்டுனர் பயிற்சி உரிமம்(லேனர்) பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு(ஆர்.டி.ஓ.) பெண்கள் படையெடுத்து வருகின்றனர். காலை முதலே வீட்டு வேலைகளை விட்டுவிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிகின்றனர்.
இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று(சனிக்கிழமை) வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கும் என்றும், இந்த நாளில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்ளாமல், ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கும் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. #tamilnews

