சீன அதிபர் வருகை எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி மாமல்லபுரத்தில் ஆய்வு

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
மாமல்லபுரத்தில் ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி
மாமல்லபுரத்தில் ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி
Published on

மாமல்லபுரம்:

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.  

அதன்பின் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

வழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். 

பிரதமர் மோடியும் நாளை சென்னை வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார். நாளை மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடையும் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள். சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீன அதிபர் வருகையை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை மாமல்லபுரம் சென்றார். அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் பாதுகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து  முதலமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சருடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com