கன்னியாகுமரியில் ஒக்கி புயல் சேத பாதிப்பு: 11-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ’ஒக்கி’ புயலால் எற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், சேதங்களை கணக்கிடும் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் ’ஒக்கி’ புயலால் எற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், சேதங்களை கணக்கிடும் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ’ஒக்கி’ புயலால் எற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், சேதங்களை கணக்கிடும் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

‘ஒக்கி’ புயலினால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு சஜ்ஜன்சிங் ரா.சவான், இ.ஆ.ப., மற்றும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட திரு. டி.கே.ராமசந்திரன், இ.ஆ.ப., முனைவர் ராஜேந்திரகுமார், இ.ஆ.ப., திருமதி ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப, ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளையும் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 29 நிவாரண முகாம்களில் 2391 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது இயல்பு வாழ்க்கை திரும்புகின்ற காரணத்தால், தற்போது 9 முகாம்களில், 891 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களும் வீடு திரும்பும் வரை போதிய உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல் போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம், இந்திய கடற்படையின் 15 கப்பல்கள், இந்திய விமானப் படையின் 5 இலகுரக விமானங்கள்,  5 ஹெலிகாப்டர்கள்  மற்றும் கடலோர காவல் படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. 

இதுதவிர, மற்ற இடங்களிலிருந்தும் 284 படகுகளில் சென்ற 2570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும், அதிலிருந்து 2384 மீனவர்களும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீதமிருக்கும் 79 படகுகள் மற்றும் 186 மீனவர்களையும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 74 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் கப்பல் படையும், விமானப் படையும், கடலோரக் காவல் படையும் தொடர்ந்து ஈடுபடும்.

முழுவதும் மற்றும் பகுதியாக சேதமடைந்த அனைத்து குடிசை வீடுகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால் 171 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 சதவீதம் குடிநீர் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் போதுமான, பாதுகாப்பான, குளோரின் கலந்த குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.  மீதமுள்ள  பகுதிகளுக்கு உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும், போர்க்கால அடிப்படையில் குடிநீர் கட்டமைப்புகளை சரி செய்து, குடிநீர் விநியோகம் வழங்கிட நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மருத்துவ முகாம்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உரிய மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்க வேண்டும்.

புயலால் முறிந்து விழுந்த சுமார் 15,000 சாலையோர மரங்களில் 9,252 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள மரங்களை உடனடியாக அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட துறைகள் ஈடுபட வேண்டும் எனவும், இப்பணிகளுக்கு பணியாளர்கள் கூடுதலாக தேவைப்படின், பக்கத்து மாவட்டங்களிலிருந்து பணியமர்த்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

விவசாய நிலங்களில் விழுந்துள்ள ரப்பர், தென்னை போன்ற மரங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கணக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

புயலால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகள் (60 கி.மீ.), மாநில நெடுஞ்சாலைகள் (40 கி.மீ.) மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புறச் சாலைகள் (சுமார் 100 கி.மீ.)  ஆகியவற்றை விரைவில் சீரமைக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் ஈடுபட வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

வேளாண் துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் வருவாய்த் துறை அலுவலர்களுடன் இணைந்து புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து கணக்கிடும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை விரைவில் வெளியேற்ற  போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், நீர் வெளியேறிய பின்  உரமிடுதல், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் வேளாண்மைத் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

புயலால் சேதமடைந்த 4,157 குறைந்த அழுத்த மின் கம்பங்களில் 1,998 மின் கம்பங்களும், 2,426 உயரழுத்த மின் கம்பங்களில் 972 மின் கம்பங்களும் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மின் கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மின்சாரத் துறை அலுவலர்கள் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மின் விநியோகம் முழுவதுமாக வழங்கப்பட வேண்டும் எனவும், இப்பணிகளுக்கும் கூடுதலாக பணியாளர்கள் தேவைப்படின், பக்கத்து மாவட்டங்களிலிருந்து பணியமர்த்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

சேதமடைந்த அனைத்து மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கும், சேதங்களைக் கணக்கிடும் பணி முடிந்ததும், தக்க நிவாரணம் வழங்கிடவும், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்கள் உடனடியாக சீர்செய்திடவும்  மீன்வளத் துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கினார்.

பொதுப்பணித் துறையினரால் 23 கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்புகளும், 19 ஏரிகளில் ஏற்பட்ட உடைப்புகளும் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள உபரிநீர் தங்கு தடையின்றி செல்ல 9 அடைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.  பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனைத்து நீர்நிலைகளில் உள்ள மதகுகள், கரைகளை  தொடர்ந்து கண்காணித்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் மற்றும் அரசுத் துறை கட்டடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட வேண்டும் எனவும்  ஆணையிட்டார்.
   
இந்த வெள்ளத்தின்போது வீடுகளில் தண்ணீர் புகுந்து சேதமடைந்த அல்லது காணாமல் போன குடும்ப அட்டைகள், நிலஉடைமை ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்களின் நகல்களை உடனடியாக  வழங்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டார்.

காணொலிக் காட்சி மூலமாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் முடிந்த பின்னர் துணை முதலமைச்சர், வனத் துறை அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தொடர்ந்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
 
இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கூறிய பணிகளை முடுக்கிவிடும் பொருட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசுச் செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர், பொது சுகாதாரத் துறையின் இயக்குநர், நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளர், பொதுப்பணித் துறையின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர், கூடுதல் காவல் தலைமை இயக்குநர் (செயலாக்கம்) மற்றும் தென்மண்டல காவல் துறைத் தலைவர் ஆகியோரை இன்றே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிடும் பணியை முடித்து இம்மாதம் 11-ம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் ஆணையிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com