

சென்னை:
கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் பத்ம விருதுகளை பெறுகின்றனர். அவர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு:-
கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இப்போது பத்ம விபூஷண் விருது வழங்கி இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமிக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி இருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், மதுரையைச் சேர்ந்த கிராமிய பாடல் இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர் நானாம்பாள், வனவிலங்கு பாதுகாவலர் ரோமுலஸ் விட்டாகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.
இளையராஜாவிற்கு சினிமா துறையினர் மற்றும் பல்வெறு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், பத்ம விருதுகள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். #PadmaAwards #TNCM