

மதுரை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நாகராஜன் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை ஆயத்த பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அங்குள்ள பாதுகாப்பு குளறுபடிகள் நீக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பொதுத் தேர்தல் பார்வையாளராக ஓம்பிரகாஷ் சாய், தேர்தல் செலவின பார்வையாளராக சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் பணிக்காக 1,500 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி தரப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் 1,500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. திருப்பரங்குன்றத்தில் பறக்கும்படை சோதனை மூலம் இதுவரை ரூ. 9 லட்சத்து 74 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும். தேர்தலையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், இடைத்தேர்தலையொட்டி திருப்பரங்குன்றத்தில் கூடுதலாக 12 சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளில் டெல்டா குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.