குழந்தை விற்பனை சம்பவம்- மேலும் ஒரு பெண் புரோக்கர் கைது

நாமக்கல் குழந்தை விற்பனை சம்பவத்தில் மேலும் ஒரு பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
குழந்தை விற்பனை சம்பவம்- மேலும் ஒரு பெண் புரோக்கர் கைது
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக நடந்த குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற நர்சு உதவியாளர் அமுதா என்கிற அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஈரோட்டை சேர்ந்த பர்வீன், ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி மற்றும் சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த சாந்தி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நர்சு அமுதவள்ளி மற்றும் இடைத்தரகர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் ஏராளமான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதுவரை 30 குழந்தைகள் வரை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சி.பி.சி.ஐடி. போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பல குழந்தைகள் விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இன்னும் பல இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ரேகா (வயது 40) என்ற பெண்ணுக்கு குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் கமி‌ஷன் அடிப்படையில் இடைத்தரகர் போல் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பெங்களூரு விரைந்து சென்று ரேகாவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நாமக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com