

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆசியா பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கட்சியான தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். சீராய்வு மனுவுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.