

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக சுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் இருந்து பணியாளர்கள் மாத கடைசியில் கணக்கு முடித்து வரவு, செலவுகளை நேரில் வந்து காண்பிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கணக்கு காண்பிக்க வந்தனர். அப்போது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.
அப்போது வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத சுமார் ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் சோதனையால் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.