திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் - கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை மர்ம கும்பல் அவமதிப்பு செய்ததை கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
Published on

தஞ்சை அருகே பிள்ளையார் பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே திருவள்ளுவர் சிலை உள்ளது.

இந்த சிலையின் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சேற்றை வாரி அடித்து, முகத்தில் கருப்பு சாயத்தை பூசி சென்றுள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை மீது கருப்பு சாயம் பூசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தமிழ் பல்கலைக்கழக போலீசார் மற்றும் வல்லம் டி.எஸ்.பி. சீத்தாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் திருவள்ளுவர் சிலையில் மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் திருவள்ளுவர் சிலையின் மீது சேற்றை வாரி இறைத்து கருப்பு சாயம் பூசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளுவர் சிலையை மர்ம கும்பல் அவமதிப்பு செய்ததை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்.எல்.ஏ. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன், அ.ம.மு.க. சார்பில் வக்கீல் நல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் பாரதி மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

மேலும் திருவள்ளுவர் படத்தை கையில் ஏந்தியப்படி பெண்கள் கோ‌ஷமிட்டனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

திருவள்ளுவர் மீது மத, இனத்தை புகுத்துவது கண்டிக்கத்தக்கது. அவர் அனைவருக்கும் பொதுவானவர். திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com