திருவள்ளூர் அருகே மாணவிகளை கிண்டல் செய்ததை தடுத்த ஆசிரியர் மீது தாக்குதல்

திருவள்ளூர் அருகே மாணவிகளை கிண்டல் செய்ததை தடுத்த ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே மாணவிகளை கிண்டல் செய்ததை தடுத்த ஆசிரியர் மீது தாக்குதல்
Published on

திருவள்ளூர்:

கடம்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பரமானந்தம். சம்பவத்தன்று பள்ளிக்குள் புகுந்த 4 வாலிபர்கள் மாணவிகளை கிண்டல் செய்தனர்.

இதனை ஆசிரியர் பரமானந்தம் தடுத்து வாலிபர்களை பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அவரை மிரட்டி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பரமானந்தம் கடம்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 வாலிபர்கள் பரமானந்தத்தை வழிமறித்து கிரிக்கெட் மட்டை மற்றும் ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயம் அடைந்த பரமானந்தம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஆசிரியர் பரமானந்தத்தை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவர்களான கோட்டீஸ்வரன், சுபாஷ், மோகன்ராஜ் மற்றும் கொட்டூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

பள்ளிக்குள் புகுந்த மாணவிகளை கிண்டல் செய்தபோது தடுத்ததால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியர் பரமானந்தத்தை அவர்கள் தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com