வங்தேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டை - கைதான பீகார் வாலிபர் திடுக் தகவல்

திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து கொடுத்ததாக பீகார் வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Aadhaarcard
வங்தேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டை - கைதான பீகார் வாலிபர் திடுக் தகவல்
Published on

திருப்பூர்:

திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து ராம்சிஷ் வர்மாவை பிடிக்க திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர். போலீசார் வருவதை அறிந்த ராம்சிஷ் வர்மா தலைமறைவாகி விட்டார்.

அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படையினர் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப் -டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவிகளை போலீசார் கைப்பற்றினார்கள்.

ராம்சிஷ் வர்மாவுக்கு வீடுபார்த்து கொடுத்து உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரி முத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

ராம்சிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த போது கொடுத்த ஐ.டி.யில் இருந்து அவினாசியில் போலி ஆதார் அட்டை அச்சடித்து கொடுத்தது தெரிய வந்தது.

அவர் திருப்பூர் மற்றும் பீகாரில் 500-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆதார் அட்டைகளை அச்சடித்து வினியோகித்து இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிக அளவில் உள்ளது. கடந்த 2 வருடங்களாக திருப்பூரில் தங்கி இருந்த ராம்சிஷ் வர்மா பலருக்கும் உதவி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.அவருக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராம்சிஷ் வர்மாவிடம் போலி ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள் திருப்பூரில் எங்கெங்கு தங்கி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

ராம்சிஷ் வர்மா வினியோகித்துள்ள ஆதார் அட்டைகள் அரசின் சர்வரில் இணைக்கப்பட்டு பெறப்பட்டதா? என்பது குறித்து மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனின் நேற்று 2-வது நாளாக திருப்பூரில் விசாரணை நடத்தினார்.

இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் கூறும் போது, பெங்களூருவில் இருந்து வந்த ஆதார் துணை இயக்குனர் திருப்பூரில் 2 நாட்கள் விசாரணை நடத்தி சென்று உள்ளார்.

கைதான பீகார் வாலிபர் எந்தெந்த குறியீடுகளில் இருந்து ஆதார் பதிவு செய்துள்ளார் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது. முழுமையான தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த வி‌ஷயத்தில் முழு எண்ணிக்கை தெரிய வரும் என்றார். #Aadhaarcard

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com